• Thu. Apr 18th, 2024

கரடிக்கல் ஜல்லிக்கட்டில் டோக்கன் கொடுப்பதில் தள்ளுமுள்ளு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தர்ராஜ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு தோறும் நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு செய்யப்படும் என இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவில் 600 மாடுகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி என நிர்ணயம் செய்திருந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் ஆண், பெண் என 600க்கும் மேற்பட்டோர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்தும் இடத்திற்கு ஏராளமானோர் வருகை புரிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து மாட்டின் உரிமையாளர்கள் டோக்கன் வழங்கும் இடத்தில் கட்டிடங்கள் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதனையடுத்து தடியடி நடத்திய பிறகும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால், முன்பதிவு செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழா கமிட்டியினர் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் கலந்தாலோசித்து ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *