தமிழக அரசின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காககத் தொடங்கப்பட்ட ‘ராக்கெட் சயின்ஸ்’ பயிற்சித் திட்டத்தில், பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் ரஷ்ய விண்வெளி மையத்தை சுற்றிப் பார்க்கச் செல்கின்றனர்.
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம் வளர்க்க, ‘ராக்கெட் சயின்ஸ்’ என்ற திட்டத்தை தொடங்கி அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு, மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பயிற்சி அளித்தார். இதில் பயிற்சி பெற்ற 75 மாணவர்கள் ரஷ்ய விண்வெளி மையத்தைப் பார்க்க, மாஸ்கோ செல்ல உள்ளனர்.
முதல்கட்டமாக 50 பேர் ஆகஸ்ட் 26-ம் தேதி ரஷ்யா செல்கின்றனர். இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ரஷ்யா செல்லவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.