

மருத்துவப் படிப்புகளில் விரும்பிய கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு சென்னையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவு வெளிவருவதற்கான தாமதம் காரணமாக, தமிழக மாணவர்களின் நலன் கருதி மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ல் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவகாசம் நீட்டிப்பு காரணமாக இருக்கை ஒதுக்கீடு முறை ஆகஸ்ட் 4, 5ல் நடைபெறுகிறது. மாணவர்களுக்கான மருத்துவக் கல்லூரி இடங்களின் முடிவுகள் ஆக. 6ம் தேதி வெளியிடப்படும் என மருத்துவ சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
