கரூர் அடுத்த வெண்ணைமலையை சேர்ந்த முருகராஜ் என்பவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காவியா நேற்று மதியம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் காவியாவின் உறவினர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உறவினர்கள் வந்து சேர்வதற்குள் காவியா இறந்ததாக தகவல் சென்றுள்ளது. இதனை அடுத்து காவியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவரையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், உறவினர்கள் வந்த பிறகும் காவியாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு வராததால் காவியாவின் உறவினர்கள் சந்தேகமடைந்து சாவில் மர்மம் இருப்பதாக கூறி கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் கைகலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என வாக்குறுதி அளித்த பிறகு உறவினர்கள் உடற்கூறு ஆய்வு செய்யும் இடத்திற்கு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.