அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆரியர்களுக்கு பேராசிரியர் என்ற பணி மேம்பாடு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள கல்லூரி முதல்வர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில், திருச்சி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கல்லூரி ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2021 ஆம் ஆண்டு திமுக அரசு அரசாணை எண் 5ல் கல்லூரி ஆசிரியர்களை பேராசிரியர்களாக பணி மேம்பாடு செய்யலாம் என்ற அரசாணை பிறப்பித்து நான்கு ஆண்டுகளாகியும் அமல்படுத்தவில்லை என்றும், 30 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றிவரும் தங்களுக்கு பேராசிரியர் பணி மேம்பாடுவழங்க மறுக்கப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். அதேபோன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மிகை பேராசிரியர்களை அரசு கல்லூரிகளில் இருந்து திரும்பபெற வேண்டும்.

மேலும் அரசு கல்லூரிகளில் பணி நியமனம் என்பது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நடத்தப்பட வேண்டும் அதற்கு மாறாக தமிழக அரசு செயல்படும் முடிவை கைவிட வேண்டும், கல்லூரி கல்வி இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதை தவிர்த்து பனிமூப்பு அடிப்படையில் மூத்த கல்லூரி பேராசிரியரை நியமிக்க வேண்டும் எனவும் அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.




