

ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, அங்கு 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை உத்தரவு செப்டம்பர்9ந்தேதி (இன்று) முதல், அக்டோபர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
144 தடை போடப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்துக்குள், வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதி சீட்டு பெற்று வர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்துக் கொண்டோ, பேனர்கள் கட்டிக்கொண்டோ வரக்கூடாது. வழிகளில் பட்டாசுகள் வெடிக்கவோ மேற்கூரைகளில் பயணிக்கவோ அனுமதியில்லை. மேலும், இந்த தடை காலக் கட்டத்தில், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.