தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களை ஒளிபரப்பும் டிஜிட்டல் நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை நீண்டகாலமாகஉள்ளது.
இக்கட்டணத்தை நாங்கள் செலுத்தமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டுவந்தது.திரையரங்குக்காரர்களோ, நீங்கள் பணம் கட்டி வெளியிட்டால் நாங்கள் திரையிடுகிறோம் இல்லையென்றால் சும்மா இருக்கிறோம் என்று சொல்லிவருகிறார்கள்.
முடிவில்லாமல் தொடரும் இந்தச் சர்ச்சையின் அடுத்த கட்டமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களும் இணைந்து ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதன்படி, டிஜிட்டல் ஒளிபரப்புக்கட்டணம் கட்டமாட்டோம் என்கிற கோரிக்கையை முன்வைத்து 2022 சனவரி 1 முதல் புதிய திரைப்படங்களைத் திரையிடமாட்டோம் என்கிற முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேசமயம், சனவரி 7 ஆம் தேதி ஆர் ஆர் ஆர் படமும் சனவரி 13 ஆம் தேதி வலிமை ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் இப்படி ஒரு வேலை நிறுத்தத்தை அறிவித்தால் சரியாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறதாம்.
இம்மாதிரியான நேரத்தில் பிரச்சினையைக் கிளப்பினால்தான் நல்ல தீர்வு கிடைக்கும் என்று பலர் சொல்கிறார்களாம்.இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றனவேலைநிறுத்தம் என்று இரண்டு சங்கங்களும் முடிவு செய்தால் ஆர் ஆர் ஆர். வலிமை ஆகிய படங்கள் வெளியீடு பாதிப்புக்கு உள்ளாகும் என்கிறார்கள்.