உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புனித நீராடினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன் திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகா கும்பமேளாவை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரக்யாராஜ் நகருக்கு வருகை தந்தார். அதன் பின்னர் இன்று காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்தின் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். அவரின் வருகையையொட்டி கும்பமேளா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.