• Mon. Apr 29th, 2024

பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது…

ByM.Bala murugan

Dec 10, 2023

வீணாகும் தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி நாட்பட்ட சர்க்கரை நோய் புண், தீக்காயம் குணமாக ஆராய்ச்சி செய்து மருந்து கண்டுபிடித்த பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது வழங்கியுள்ளதுடன் ஆராய்ச்சியை மேம்படுத்த ரூ.80 லட்சம் மத்திய அரசு நிதியும் வழங்கியுள்ளது.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் விவேகானந்த் . இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் குடும்பத்தை சார்ந்தவர்.
உலக அளவில் இந்தியா, இந்தோநேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேசியா உள்ளிட்ட 100க்கும் அதிகமான நாடுகளில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் தொன்மையான கலாச்சாரத்துடன் இணைந்த பயிராக தென்னை உள்ளது. உலக அளவில் தென்னை விவசாயம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகம், கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம். இந்தியா முழுவதும் 18.95 லட்சம் ஹெக்டேர் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. இதில் 16 ஆயிரத்து 940 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரையாக மாற்றப்படுகிறது. கொப்பரையாக தேங்காய் மாற்றப்படும் இடங்களில் உடைக்கப்படும் தேங்காய்களில் இருந்து தேங்காயின் தண்ணீர் பயன்பாடு இன்றி வீணாகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 20 கோடி லிட்டர் தேங்காய் தண்ணீர் வீணாகிறது.
இப்படி வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் விவேகானந்தன் சர்க்கரைநோய் புண்களை குணமாக்கும் மருந்தை கண்டறிந்துள்ளார். இவர் கோவை உள்ள பிரபல மருத்துவமனை உதவியுடன் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தேங்காய் தண்ணீர், தேங்காய் எண்ணையில் உள்ள லாரிக் அமிலம் போன்வற்றை பயன்படுத்தி மருந்து கண்டுபிடித்து நீண்ட நாட்களாக ஆராத சர்க்கரை நோய் புண், தீக்காயம் போன்றவை சரியாகும் வகையில் மருந்து தயாரித்துள்ளார். இதை சோதனை செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் இந்த ஆராய்ச்சியை யாரும் இதுவரை செய்யவில்லை. அதனால், இந்த கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், ஆராய்ச்சியை மேம்படுத்தவும் ரூ.80 லட்சம் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த மருந்தை தயாரிக்க பொள்ளாச்சியில் தொழிற்சாலை துவங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்துக்கான காப்புரிமையையும் வழங்கியுள்ளது. பொள்ளாச்சியில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மருந்து பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. நாள்பட்ட தீக்காயம், சர்க்கரை நோய் புண்கள் குணமாக பெரும்பாலான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுவரும் நிலையில் உள்நாட்டிலேயே அதுவும் பொள்ளாச்சியிலேயே மருந்து தயாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது ஆராய்ச்சியை பாராட்டி ஜனாதிபதி சமீபத்தில் விருதும் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து விவேகானந்த் கூறுகையில், கொங்கு மண்டலத்தில் உற்பத்தியாகும் 4500 கோடி தேங்காய்களில் இருந்து பெரும்பாலும் கொப்பரைகளாக மாற்றப்படும்போது அதில் இருந்து கிடைக்கும் மருத்துவ குணம் வாய்ந்த தேங்காய் தண்ணீர் வீணாக்கப்படுகிறது. மேலும் தேங்காய் எண்ணைய் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதை நிரூபிக்கவும் அதில் இருந்து கிடைக்கும் லாரிக் அமிலத்தையும், தேங்காய் தண்ணீரையும் மூலப்பொருளாக கொண்டு சர்க்கரைநோய் நாட்பட்ட புண்கள் குணமாக்க மருந்து கண்டறியும் ஆராய்ச்சில் ஈடுபட்டேன். அதில் வெற்றி கிடைத்தது. ஆராய்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பாக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்தை அங்கீகரித்துள்ளது.
மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை பொள்ளாச்சியில் கட்டப்பட்டு மருந்து தயாரிக்கும்
தயாரிக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது.
விரைவில் மருந்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலைக்கு வழங்க உள்ளோம். புண்ணின் மேற்பரப்பில் புண்ணின் மேற்பரப்பில் இதை மருந்துக்கட்டாக பயன்படுத்தவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *