• Sat. Apr 26th, 2025

புதிய பாம்பன் பாலத்துக்கு அப்துல்கலாம் பெயரை வைக்க பிரேமலதாவிஜயகாந்த் வலியுறுத்தல்

Byவிஷா

Mar 29, 2025

ஏப்ரல் 6ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ள புதிய பாம்பன் பாலத்துக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பெயர் வைக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பாம்பன் புதிய பாலம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி புதிய பாலத்தை திறந்து வைக்க உள்ளார் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
“ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 6ம் தேதி திறக்க உள்ளார். பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கிறது. ஆகவே, பாம்பன் பாலத்திற்கு ராமேஸ்வரத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பிறந்து, வளர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை புதிய பாம்பன் பாலத்திற்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
தொடர்ந்து, பிரதமர் அவர்கள் ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தைத் திறக்க வரும் நிலையில் அந்த பாலத்திற்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்டி இஸ்லாமியர்களுக்கும், ராமேஸ்வரத்திற்கும் பாரம்பரியம் மிக்க நமது பாம்பன் பாலத்திற்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் விரதம் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஏபிஜெ அப்துல்கலாம் அவர்களின் பெயரை வைப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு கவுரவத்தை இந்த ரம்ஜான் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் எனவும் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு, அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாம்பன் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதுதான் ராமேஸ்வரம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.