

காஞ்சிரங்கால் ஊராட்சியை பிரதமர் பாராட்டி இருப்பது அகில இந்திய அளவில் பெயர் சொல்லும் அளவுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் பணிகள் சிறப்பாக இருப்பதற்கு எடுத்துக்காட்டு என அமைச்சர் கே.சி. பெரியகருப்பன் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சமூக பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று 184 பேருக்கு 94.40 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ சிவகங்கை அடுத்துள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் மக்கும் குப்பைகளை பிரித்து அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கிவைத்தோம், அந்த திட்டத்தை நேற்று பிரதமர் பாராட்டி இருப்பது அகில இந்திய அளவில் பெயர் சொல்லும் அளவுக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறையின் பணிகள் சிறப்பாக இருப்பதற்கு எடுத்துக்காட்டு என பெருமிதமடைந்தார். மேலும் வரும் காலத்தில் மின்சாரம் தயாரிக்கும் சக்தி கூட்டப்பட்டு அப்பகுதி முழுவதும் மின்சாரத்தில் தன்னிறைவு பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
