மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், அஞ்சல் துறை அலுவலகங்களில் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,
“ அகில இந்திய மத்திய சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு அறிவிப்பிற்கு இணங்க, கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரை செய்த, சில முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, பென்ஷனுக்கான பலன்களை வழங்க வேண்டும். பணிக்காலத்தில், 180 நாட்கள் விடுப்பை சேமித்து, பணமாக்கும் வசதியை உருவாக்கி தர வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் அஞ்சலக குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க சிவகங்கை கோட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.