கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ இ.மகேந்திரனை உசிலம்பட்டி தொகுதி மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக அமைப்புச் செயலாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார்.
உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் இ.மகேந்திரன். இவர், அமமுக தலைமைக் கழக செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிடிவி.தினகரன் புதிய கட்சி துவங்கியதும் அக்கட்சியில் இணைந்தார். 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் 31199(13.80மூ) வாக்குகளை பெற்றார். இதனால் அங்கு அதிமுக தோற்று, திமுக வென்றது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மகேந்திரன் 55491(26.11மூ) வாக்குகளை பெற்றார்.
இதனால் திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன் தோற்று, அதிமுக வேட்பாளர் அய்யப்பன் வென்றார். இப்பகுதியில் தனக்கென தனி செல்வாக்குடன் இருப்பவர் என்பதை அடுத்தடுத்த தேர்தலில் நிரூபித்தவர். டிடிவி தினகரனின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இ.மகேந்திரனுக்கு தற்போது உசிலம்பட்டி தொகுதி மற்றும் மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்துள்ளார்.