• Sun. May 12th, 2024

பொன்னியின் செல்வனுக்கே புரமோஷன் தேவைப்படுகிறது – இயக்குநர் அமீர்

Byதன பாலன்

Apr 18, 2023

விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. ஏப்ரல் 21 ஆம்தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது…

இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார்.அமீர் அண்ணன் அவருடைய படங்களை தாண்டி மிகப்பெரிய அன்புள்ள மனிதர் அவர் எனக்காக வந்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிகச்சிறப்பான வசனங்கள் தந்துள்ளார். அவரால் படத்திற்கு பெரிய பலம் சேர்ந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது. நல்ல கருத்துள்ள படத்தை தந்துள்ளோம் படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என்றார்.

இசையமைப்பாளர் மஹாலிங்கம் பேசியதாவது..

தயாரிப்பாளரும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் என் கிராமத்து இசையை ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் எனக்கு பிடித்ததை செய்து கொண்டிருந்தேன் அதைப்பார்த்து இந்தப்படத்திற்கு இசை அமையுங்கள் என்றார் தயாரிப்பாளர். இந்தக்களம் பெரிது புதிது என்பதால் தயங்கினேன் ஆனால் படக்குழு தைரியம் தந்தார்கள். இயக்குநர் எனக்கு ஊக்கம் தந்தார். நாங்கள் புது டீம் நீங்கள் தான் எங்களுக்கு ஆதரவு தந்து எங்கள் படத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். நான் காசில்லாமல் வேலைக்காக வெளிநாடு சென்ற போதே அவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்தார். நான் இங்கு வந்தபிறகும் அவர் அதே முயற்சியில் விடாப்பிடியாக இருந்தார். நல்ல திறமைசாலி பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கான சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்றார்

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது..

இந்த படத்தின் இயக்குனர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும் ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன் அதை பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன், சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள் , இருபது வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தார், அது அவரது முதல் படம் எனக்கு உதவி இயக்குனராக முதல் படம் , சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர், அதன் பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர், நான் இதற்கு ஒத்துப் போகவில்லை பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன், அதற்கு சரவணன் இந்த படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார் , அதன் பிறகு நான் அந்த கதாநாயகருடன் பேசினேன் அவர் 3 லட்சதிலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார், அந்த கதாநாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யாதான் , ஒரு வழியாக பேசி கஷ்ட பட்டு படத்தை முடித்து விட்டோம், படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது, “சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார் ” என்று அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன் , அதன் பிறகு ஒரு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்து படம் இயக்கினார், அதில் கட்சிக்கு தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார், இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது, இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன் உங்களுக்கேற்ற கதையை பிடிதுள்ளீர்கள் கண்டிப்பாக வெற்றிதான் வாழ்த்துகள் என்றேன் என்றார்.

காவல்துறை அதிகாரி ஜாங்கிட் பேசியதாவது

தம்பி சரவணன் சக்தி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள், நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன் என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை, எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது என்னுடைய டிரைவர் தான், என் டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாது எனக்கு தமிழ் தெரியாது, ஒரு நாள் அவரிடம் சீப்பு கேட்டேன் அதை நான் புரிய வைப்பதற்குள் ரொம்ப சிரமப்பட்டேன் , அன்றிலிருந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன், படத்தில் நடிப்பது நான் சுலபமான விஷயம் என்று நினைத்தேன் ஆனால் அது மிகக் கடினம் என்பதை புரிந்து கொண்டேன், என்னுடைய கதாபாத்திரம் சிறியது தான் ஆனால் சமுகத்திற்கு தேவையான கருத்தை படத்தில் கூறியுள்ளேன். டப்பிங் அதற்கும் மேல் கஷ்டமாக இருந்தது ஆனாலும் கஷ்ட பட்டு பேசியுள்ளேன். இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ள கருத்து அனைவரிடமும் சேர வேண்டும் என்றார்

இயக்குநர் அமீர் பேசியதாவது…

இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர், நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர். இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் வராதது எனக்கு வருத்தமே. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *