தமிழக காவல் நிலையங்களில் இனி மரணங்கள் நிகழக்கூடாது ஜனாதிபதியின் கொடி
வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் என்ற சிறப்பையும் தமிழ்நாடு பெற்றுள்ளது.
தமிழக போலீஸ் துறைக்கு கவுரவமிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். துணை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது. காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச்சூடுகள் இல்லை. காவல்நிலைய மரணங்களே இல்லை என சொல்லவில்லை. ஆனால் குறைந்துள்ளது.காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும். சிறு தவறு செய்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். பாலியல், போக்சோ சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் கொடியை வழங்கி சிறப்பித்துள்ள, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை வரவேற்கிறேன்.
இந்தியாவின் பல நகரங்களுக்கு முன் மாதிரியானது நமது காவல்துறை. தமிழ்நாட்டு காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள் இது. மிக உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அனைத்து காவலர்களுக்கும் கிடைத்துள்ள பெருமை இது, என அவர் கூறினார்.