பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சாலை மார்க்கமாக சென்றபோது 15-20 நிமிடங்கள் மேம்பாலத்தில் பிரதமர் மோடி சிக்கிக் கொண்ட விவகாரத்தின் சூடு இன்னும் அடங்கவில்லை.
பிரதமர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. இது கடுமையான பாதுகாப்புக் குறைபாடு என்று பஞ்சாப் மாநில அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமரைக் காக்க உயிரைக் கொடுத்திருப்பேன் என்று தெரிவித்தார்.
மேலும், “இனி வரும் காலங்களில் ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்வேன் . பிரதமர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு, பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசு குழு ஒன்றையும் நியமித்துள்ளது.
ஆனால், பஞ்சாப் மாநில அரசு அமைத்த குழுவை நிராகரித்த பாஜக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை ‘சதித் தலைவர்’ என்று அழைத்தார்.
“இந்த விவகாரத்தை விசாரிக்க பஞ்சாப் அரசு அமைத்த குழுவை நாங்கள் நிராகரிக்கிறோம். முதலமைச்சரால் அமைக்கப்பட்ட இந்த குழுவால் எதையும் கண்டுபிடிக்க முடியாது, ஏனெனில் அவரே இந்த சதித்திட்டத்தின் தலைவர்.
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபின் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, சாலை வழியாக பயணம் செய்ய திட்டமிடப்படடது.
பஞ்சாப் மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னர், பிரதமர் சாலை வழியாக பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் சாலை மார்க்கமாக வந்ததைப்பார்த்த சிலர் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் பயணித்த வாகனங்கள் 15-20 நிமிடங்கள் சிக்கிக் கொண்டன. அதன்பிறகு, பிரதமர் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பி சென்றுவிட்டார்.
இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி என்று கூறும் மத்திய அரசு, பிரதமரின் அட்டவணை மற்றும் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.
பதிண்டா விமான நிலையத்துக்கு திரும்பியவுடன் அங்கு தமது பாதுகாப்புக்காக வந்திருந்த மாநில காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய நரேந்திர மோடி, “என்னால் உயிருடன் விமான நிலையத்தை அடைய முடிந்தது, இதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு மாநில அரசே காரணம் என்றும் உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.