பஸ்சில் தொங்கிய படியே சாகச பயணம் செய்த பிளஸ் -1 மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் தொங்கியபடி சாகச பயணம் செய்து வருகிறார்கள்.
மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணம் செய்தார். மேலும் அவர் படிக்கட்டில் தொங்கியபடி இரண்டு கால்களையும் தரையில் உரசி சாகசம் செய்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் கண்டக்டர் கண்டித்தும் அந்த மாணவர் கண்டு கொள்ளாமல் தனது சாகச பயணத்தை தொடர்ந்தார். இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதில் அந்த மாணவன் அணிந்து இருந்த சீருடையை வைத்து கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருவது தெரிந்தது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். அவர்மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது பெற்றோரையும் அழைத்து போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து அறிவுரை கூறினர்.