சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான வேப்பேரி, எழும்பூர், என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த தனியார் நிறுவனம் பொதுமக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து திருப்பித் தராத பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததாகவும், சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் மத்திய அமலாக்கத் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் படை மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் நிலையில் சோதனை தொடர்பாக இதுவரை யாரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. சோதனைக்குப் பிறகே அந்த நிறுவனம் பற்றிய தகவல்களும் அமலாக்கத் துறை சோதனை பற்றிய விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.