தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 வயது சிறுமி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை. தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி தெற்கு தெருவில் உள்ள மாயகிருஷ்ணன் செல்வபழனி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மாயகிருஷ்ணன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு மாயகிருஷ்ணன் லாரியில் டெல்லி சென்ற நிலையில், தாய் செல்வபழனி குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து 8 வயது சிறுமி சாதனா வீட்டில் தனியாக இருந்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அதைப் பார்த்த தாய் செல்வபழனி தூக்கில் தொங்கிய குழந்தையை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது.
மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்பு சிறுமி இறந்து விட்டதாக கூறியதைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறைக்கு தெரிந்ததை தொடர்ந்து ,சம்பவ இடத்தை பார்வையிட்டு சிறுமி தற்கொலைக்கான காரணத்தையும், கொலையா? தற்கொலையாஇந்த சம்பவம் என்ற பல்வேறு கோனத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறுமி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். 8 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.