• Sat. Apr 20th, 2024

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு

சென்னையில் இன்று நடைபெற்ற நாட்டின் 73-வது குடியரசு தின விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் தந்தை பெரியார் உருவமும் இடம்பெற்றிருந்தது. சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பெரும்பாலும் அறியப்பட்ட தந்தை பெரியார் சுதந்திரப் போராட்டத்திலும் தீவிர பங்காற்றியவர். இந்தியா விடுதலை பெற்ற 25-ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது, விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர்களுக்கு நாட்டுமக்களின் சார்பாக பிரதமர் இந்திராகாந்தியால் தாமிரப் பட்டயம் கொடுக்கப்பட்டது.

தந்தை பெரியார் 1919-ம் ஆண்டு அன்று தேச விடுதலைக்காக போராடிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அன்றைய காங்கிரஸ் கட்சியின் பிரதான கொள்கைகளான கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றுக்காக அரும்பாடுபட்டார் தந்தை பெரியார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காகவே தாம் பதவி வகித்த ஈரோடு நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பொது பதவிகளை தூக்கி எறிந்தார் தந்தை பெரியார். தாம் மட்டுமல்ல தமது குடும்பத்தினரையும் தேச விடுதலைப் போரில் பங்கேற்கச் செய்தார். 1921-ம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றதால் பெரியார் சிறை சென்றார். அப்போது மனைவி நாகம்மையாரையும் சகோதரி பாலாம்பாள் அம்மையாரையும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் முன்னுதாரணமாக கள் இறக்கப் பயன்படுத்தப்பட்ட தமது தென்னந்தோப்பில் இருந்த 500 மரங்களை வெட்டிச் சாய்த்து விடுதலை வேட்கையை வெளிப்படுத்தினார் தந்தை பெரியார்.

காந்தியடிகளும் பெரியார் போராட்டமும்

நாடு முழுவதும் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈரோடுதான் தகித்து கொண்டிருந்தது. இதனால் காந்தியடிகளை சந்தித்து கள்ளுக்கடை மறியல் போராட்டத்தைக் கைவிட கேட்டுக் கொண்டனர். ஆனால் காந்தியடிகளோ, போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும் என தந்தை பெரியாரின் மனைவி நாகம்மையாரையும் சகோதரி பாலாம்பாளையும் சுட்டிக்காட்டினார். இப்படி விடுதலைப் போரில் தமது குடும்பத்தையே களமிறக்கி முன்னோடித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தந்தை பெரியார். ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றவர் தந்தை பெரியார்.

பெரியார் எனும் வைக்கம் வீரர்

அடுத்ததாக தீண்டாமை எதிர்ப்பு போரில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று களமாடினார் தந்தை பெரியார். கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் தலித்துகள் எனப்படும் ஆதிதிராவிடர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை உடைக்க அங்கே போராட்டங்கள் நடந்தன. தீண்டாமை எதிர்ப்பு போராளிகள் சிறை சென்றனர். அப்போது தந்தை பெரியாரை போராட வருமாறு கேரளா தலைவர்கள் அழைத்தனர். இதனை ஏற்று வைக்கம் வீதிகளில் போராடினார் தந்தை பெரியார். இதையடுத்து தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் வைக்கம் வீரர் என்கிற புரட்சிகர பட்டமும் பெரியார் வரலாற்றில் இணைந்தது. இத்தனைக்கும் திருவிதாங்கூர் மகாராஜா பெரியாரின் நண்பர்தான்.. ஆனால் தீண்டாமை எதிர்ப்பு களத்தில் பெரியார் சமரசம் செய்து கொள்ளவில்லை.

பெரியார் சுதந்திர போராட்ட வீரர் என்று அப்போதைய மத்திய அரசால் கொடுக்கப்பட்ட தாமரை பதக்கம்

சேரன்மாதேவி குருகுலம்

இதனைத் தொடர்ந்து 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. தந்தை பெரியார் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார். இன்றைய இடஒதுக்கீடுகளுக்கு முன்னோடியாக பின்தங்கிய பிரிவினருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்தும் வழங்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடுகளில் கொண்டுவர இடைவிடாமல் முயற்சித்தார். ஆனால் தந்தை பெரியாருக்கு இந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவில்லை. ஆதிக்க ஜாதி காங்கிரஸ் தலைவர்கள் இந்த தீர்மானத்தை தோற்கடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சேரன்மாதேவி குருகுலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தந்தை பெரியார் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தன. சேரன்மாதேவியில், வ.வே.சு ஐயர் குருகுலம் ஒன்றை நடத்தினார். இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.10,000 நிதி அளித்து வந்தது. அப்போது பெரியார்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர். ஆனால் சேரன்மாதேவி குருகுலத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது. உயர்ஜாதி மாணவர்களுக்கு நல்ல உணவு, இதர பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு சாதாரண உணவும் வழங்கப்பட்டது. குடிக்கிற தண்ணீர்கூட தனித்தனியே பிரித்து வைத்திருந்தன. இது அந்த நாளில் காங்கிரஸ் கட்சியில் பிரளயத்தையே ஏற்படுத்தியிருந்தது. தீண்டாமையை கடைபிடிக்கும் வவேசு ஐயர் குருகுலத்துக்கு நிதி ஒதுக்க மறுத்தார் பெரியார். இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால் காங்கிரஸில் இருந்த உயர்ஜாதி தலைவர்கள் வ.வே.சு.ஐயர் பக்கமே நின்றனர். இதில் பெரியார் கடும் அதிருப்தி அடைந்தார்.

காங்கிரஸில் இருந்து விலகல்- சமூக விடுதலை

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தேசியவாதிகள் தங்களது நெஞ்சங்களில் வர்ணாசிரமம் எனப்படும் ஆதிக்க ஜாதி, அடக்குமுறை மனோபாவத்துடன் செயல்படுவதை பெரியார் ஏற்கவில்லை, விரும்பவில்லை. தந்தை பெரியார் இத்தகைய அடக்குமுறைகளில் இருந்து சமூக விடுதலையே பிரதானம் என்பதை நேசித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியதுடன் காங்கிரஸை ஒழிப்பதே என் முதல் பணி என்றார். தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கவே 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார். ஏற்கனவே பிராமணரல்லாதார் இயக்கமாக செயல்பட்ட நீதிக்கட்சியுடன் கரம் கோர்த்தார். ஒரு கட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவரானார். பின்னர் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக்கினார். அந்த திராவிடர் கழகத்தின் நீட்சிதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசு. அதனால்தான் தந்தை பெரியாரின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பை குடியரசு தின ஊர்வலத்தில் காட்சிப்படுத்தி பெருமை சேர்த்திருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடர் இயக்க அரசு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *