முசிறி அருகே வெள்ளை பாறை கிராமத்தில் இருக்கும் அழகு நாச்சி அம்மன் மற்றும் பால தண்டாயுதபாணி முருகன் கோயில்களை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட உரிமை பிரச்சனை நிலவி வருவது தொடர்பாக வட்டாட்சியர் சண்முகப்பிரியா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
முசிறி மண்டல துணை வட்டாட்சியர், வாத்தலை காவல் உதவி ஆய்வாளர், ஆமூர் பகுதி வருவாய் ஆய்வாளர், நெய்வேலி கிராம நிர்வாக அலுவலர், மற்றும் ‘ அ ‘தரப்பில் வெற்றிச்செல்வன் உட்பட 5 நபர்களும் ‘ஆ ‘ தரப்பின் சார்பாக அழகியான் உட்பட 5 நபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இது சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் இருதரப்பினரின் வாதங்களைக் கேட்டரிந்த பின்பு, நெய்வேலி வருவாய் கிராமம் வெள்ளை பாறை குக்கிராமத்தில் அமைந்துள்ள அழகு நாச்சி அம்மன் திருக்கோயில் ஆனது நம்பியான் பண்ணை வகையறா குடும்பத்தினருக்கு சொந்தமான குடிப்பாட்டு கோயில் ஆகும். மேற்படி குடிப்பாட்டு கோயிலின் வரி வசூல் மற்றும் கணக்கு வழக்குகள் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் பண்ணைக்காரர் மற்றும் பட்டையதாரர் ஆகிய பொறுப்பு நியமனங்கள் மேற்படி நம்பியான் பண்ணை வகையறா குடும்பத்தில் கூட்டு முடிவுக்கு கட்டுப்பட்டது என்பதால், மேற்படி கோவிலின் பண்ணைக்காரர் மற்றும் பட்டையக்காரர் யார் என்பதை ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் சுமூகமான முறையில் பேசி தீர்வு காணும் மாறும், அவ்வாறு சுமூகமான தீர்வுகள் எட்டப்படாத பட்சத்தில் உரிமை இயல் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடி கொள்ளுமாறும், மேற்படி அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேற்படி பிரச்சினை தொடர்பாக எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேற்கூறிய தீர்மானங்களை ஏற்று ‘அ’ மற்றும் ‘ஆ’ தரப்பினர் கையொப்பமிட்டு சென்றனர்.