தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என போற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்,அவருக்கு வயது 84.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

அதன் பிறகு ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.
ஸ்டூடியோவிலிருந்து தமிழ் சினிமாவை வெளியே கொண்டு வந்த பெருமை பாரதிராஜாவைச் சாரும்.
6 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாளி பாரதிராஜா.
2004-ம் ஆண்டு பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார்.
கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.
அதன் பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். இதற்கிடையே தான் கடந்த டிசம்பர் இறுதியில் உடல் நலக்குறைவால் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும், உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன என்றும், எங்கள் மருத்துவ நிபுணர் குழுவினரால் அவர் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார் எனவும் மருத்துவமனை தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், உடல் நல பாதிப்பு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார்.
அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




