தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஜனசேனா கட்சியின் தலைவர் பவன்கல்யாண், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பது, ஆந்திர அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் இணைந்து பாஜக கூட்டணியில் போட்டியிட்டார். இதற்கிடையே, ஊழல் வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிறையில் நேரில் சந்தித்து பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பவன் கல்யாண் பேசியதாவது:
“தெலுங்கு தேசம் வலுவான கட்சி. ஆந்திரத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த ஆட்சிக்கும் தெலுங்கு தேசம் தேவைப்படுகிறது. இன்று தெலுங்கு தேசம் இக்கட்டான சூழலில் உள்ளது. நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இந்த சூழலில் ஜனசேனா இளைஞர்களின் ஆதரவு தெலுங்கு தேசத்துக்கு தேவைப்படுகிறது. தெலுங்கு தேசமும், ஜனசேனாவும் இணைந்தால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மூழ்கிவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், ஆந்திரத்தில் ஓரளவு மக்கள் வரவேற்புள்ள ஜனசேனாவும் விலகுவதாக அறிவித்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்த பவன்கல்யாண்..!





