அகமதாபாத்தில் இன்று தொடங்கவிருக்கும் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. இதற்கு முன்பு 1987, 1996, 2011-ம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் இணை அமைப்பாளராக இன்னொரு நாடும் இருக்கும். ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.
இன்று நடைபெற இருக்கும் தொடக்க போட்டியில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. இதற்கு முன்பு மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி மாநகரங்களில் மட்டுமே முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின என்பதிலிருந்து விலகி, இப்போது அகமதாபாதில் தொடங்க இருப்பது புதிய முயற்சி.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனமும் இன்று அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குவிந்திருக்கிறது. அமெரிக்க அதிபர்கள் பேஸ்பால் போட்டியின் முதல் பந்தை வீசி தொடங்கி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் அதிபர்களோ, பிரதமர்களோ விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. அதே போல் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில், உலகக் கோப்பையின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஆட்டத்தில், முதலாவது பந்தை வீசி பிரதமர் நரேந்திர மோடியே தொடங்கி வைக்கிறார் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிரதமரின் ஆதரவாளர்களும் உற்சாகத்தில் திளைக்கிறார்கள்.