• Mon. Jan 20th, 2025

மின்தடையால் மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி

ByKalamegam Viswanathan

Dec 18, 2024

சோழவந்தானில் 10 மணி நேரத்திற்கு மேலாக மின்தடையால் மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். டார்ச் லைட் அடித்து மருத்துவம் பார்த்த பணியாளர்களால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தன.

மதுரை மாவட்டம்சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி என்று காரணம் கூறி, மின்சார வாரியம் நேற்று காலை 9 மணிக்கு மின்சாரத்தை நிறுத்தியது பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும் மின்சாரம் மாலை 3 மணி அல்லது 5:00 மணிக்கு மறுபடியும் மின்சாரத்தை வழங்குவது வழக்கம்.

ஆனால் ஒரு சில தனி நபர்களின் சுயநலத்திற்காக மின் துறையினர் வியாபார நோக்கத்தில் மின்சார துறை பணியாளர்களை கொண்டு இரவு 8 மணி வரை மின்தடை செய்ததால் சோழவந்தானின் பல பகுதிகளில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

குறிப்பாக சோழவந்தான் மையப்பகுதியில் உள்ள மருத்துவமனையானது சுமார் 30,000 பேர் மருத்துவ உதவிகளுக்காக இயங்கக் கூடியது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் 10 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். குறிப்பாக மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் உள் நோயாளிகள் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் என மருத்துவமனைக்கு வந்து சென்ற அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டார்ச் லைட் கொண்டு மருத்துவம் பார்த்து அவலமும் ஏற்பட்டது.

இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே சோழவந்தான் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செயல்படவில்லை என பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வரும் நிலையில் மின்தடையை காரணம் காட்டி 10 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனைக்கு மின்சாரம் வழங்காமல் இருந்தது பொதுமக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியது. இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில் மின்சாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் சிரமங்களை சிறிதளவும் கவனத்தில் கொள்வதில்லை. மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை செய்யும் அதிகாரிகள் முறையாக சரியான நேரத்திற்கு மின்சாரத்தை வழங்க வேண்டும்.

இதனை நம்பியே வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பணிகளை ஒத்தி வைத்துள்ளனர். அல்லது முறையாக அறிவித்துவிட்டு பணிகளை செய்ய வேண்டும். ஒரு சில தனிநபருக்காக மின்சாரத் துறையினர் மின்தடை ஏற்படுத்தியது. பொதுமக்களை கடும் எரிச்சல் அடைய வைத்தது. இது அரசுக்கு தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்கும் என கூறினர். இனிவரும் காலங்களில் ஆவது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மின்சாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.