வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் செல்ல இருப்பதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தேவர் குருபூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள் ஏற்கெனவே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் குருபூஜையில் பங்கேற்க இருப்பதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்துக்கு செல்லும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெருந்திரளாக வருகை தந்து தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.