மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகே மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மன்னாடிமங்கலம் சென்ற அரசு பேருந்தில் புகை கிளம்பியது.

இதனால் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்த பயணிகளை அவசர அவசரமாக கீழே இறங்கச் செய்தனர். தொடர்ந்து பத்து நிமிடத்திற்கு மேலாக பேருந்தின் கீழே இருந்து புகை வந்த வண்ணம் இருந்தது. பின்னர் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக அருகில் அமரச் செய்து அரை மணி நேரம் கழித்து மாற்று பேருந்தில் சோழவந்தானுக்கு அனுப்பி வைத்தனர்.
சோழவந்தான் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பராமரிக்கப்படாத நிலையில் இருப்பதாக தொடர் புகார்கள் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் தற்போது பேருந்தில் இருந்து புகை வந்தது. இதுபோன்ற பேருந்துகளை மாற்றி விட்டு இந்த வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டுமென போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.