சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது அப்போது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக எடுத்து வந்த பெற்றோர்கள்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை உத்தரவின் பெயரில் சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி இன்று கண்டாங்கிபட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியை உமாமகேஸ்வரி தலைமையில் மாணவர் விழா சேர்க்கை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து, வட்டார கல்வி அலுவலர் பாலாமணி, கண்டாங்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மந்தக்காளை ஆகியோர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து பள்ளி நுழைவாயில் இருந்து வரவேற்று அழைத்துச் சென்றனர். கண்டாங்கிபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் இதுவரை ஐந்து வகுப்புகளில் 55 மாணவர்கள் பயின்று வருகிறார்கள் இன்று கண்டாங்கிபட்டி, வகுலத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 10 மாணவர்கள் புதிதாக சேர்க்க வந்த பெற்றோர்கள் பள்ளிக்குத் தேவையான தண்ணீர் ட்ரம், குடம், மின்விசிறி, கடிகாரம், வாலி உள்ளிட்ட பொருட்களை தேங்காய் பழத்துடன் சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.
இந்நிகழ்வில் கண்டாங்கிபட்டி கிராம பெரியவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பிரேமா, யமுனா, காவியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரண்யா மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.