கனிம வளங்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்த கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் பகுதியில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் கனிம வள அதிகாரிகள் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அவர்கள் கூறுகையில்..,
சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி பரதசக்கவர்த்தி சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்த கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பினை நாங்கள் வரவேற்கிறோம். பல்லடம் கோடாங்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த எஸ்.வி.ஏ புளு மெட்டல் என்ற கல்குவாரி நிறுவனம் சட்ட விரோதமாக 140 கோடிக்கு மேல் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் புகார் அளித்தார். ஆனால் கனிமவளத்தை செயலாளர் ஜெயகாந்தன் முறையான விசாரணை செய்யாமல் எஸ்.வி.ஏ புளு மெட்டல் நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாயை அபராதமாக விதித்தார். மேலும் முன்பணம் 40 லட்சம் செலுத்தி விட்டு. 4 தவணையாக மீதி தொகை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு அளித்து கற்களை வெட்டி எடுக்க அனுமதியளித்தார் .
இதனையடுத்து விவசாயி சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை விசாரணை செய்ததில் எஸ்.வி.ஏ புளு மெட்டல் நிறுவனம் அரசு அளித்த அனுமதியை விட140 கோடி மதிப்புள்ள கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்தது தெரிய வந்தது. எனவே அந்த நிறுவனத்தின் மீதும் அதற்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு அளித்து 10 தினங்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.