• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

ஜன.19ல் பழனி தைப்பூசத் திருவிழா தொடக்கம்..!

Byவிஷா

Jan 3, 2024

வருகிற ஜனவரி 19ஆம் தேதி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்;ச்சியாக தேரோட்டமும் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூச திருவிழா ஒவ்வொரு வருடமும் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். பக்தர்கள் தைப்பூச திருவிழாவினையொட்டி, விரதமிருந்து முருகனுக்கு விதவிதமான காவடிகளைச் சுமந்து நடைப்பயணமாகவும் பல ஊர்களில் இருந்து பழநி மலையேறி முருகனை தரிசிப்பார்கள். இந்த வருட தைப்பூசத் திருவிழா, பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரும் ஜனவரி 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. வருடம் முழுவந்தும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருவிழா நடைப்பெற்றாலும் தைப்பூச திருவிழா கூடுதல் விசேஷம். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக, காவடி சுமந்து சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இப்படி பெரும் பிரசித்தி பெற்ற இந்த திருவிழா ஜனவரி 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் ஜனவரி 24-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரத உற்சவம் நடைபெறும்.
தொடர்ந்து, வரும் 25-ம் தேதி தைப்பூச திருவிழாவும், மாலை 4.30 மணிக்கு மேல் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. 28-ம் தேதி திருவிழாவின் கடைசி நாளன்று தெப்பத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள். அவர்களுக்குத் தேவையானா குடிநீர், தங்கும் இடங்கள், கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.