ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து, அது வளரும் சூழல் ஏற்பட்டால் நாம் பயன்படுத்தும் தடுப்பூசிகளின் செயல்திறன் செயலிழக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
ஆதலால், தடுப்பூசிகளில் தேவைக்கு ஏற்ப மாற்றம் கொண்டுவரத் தயாராவது அவசியம் என்று கோவிட் தடுப்புக் குழுவின் தலைவர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ககப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 70 நாடுகளுக்குப் பரவிவிட்டது. தென் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வரும் மக்களுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளையும்,சில நாடுகள் தடைகளையும் விதித்துள்ளன.
இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை மீறி பாதிக்கிறது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் முழுமையான தகவல் ஏதும் இல்லை.
இந்நிலையில் மத்திய அரசின் கோவிட் தடுப்புக்குழுவின் தலைவர் வி.கே.பால், இந்திய தொழில்வர்த்தகக் கூட்டமைப்பின் சார்பில் நடந்த விழாவில் நேற்று பங்கேற்றார். அப்போது வி.கே.பால் பேசியதாவது:
நாம் டெல்டா வைரஸின் பாதிப்புகளை பார்த்தோம், அதில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறோம்.இப்போது அடுத்ததாக ஒமிக்ரான் அதிர்ச்சியை பார்த்து வருகிறோம். கடந்த 3 வாரங்களாக ஒமிக்ரான் பரவலின் கட்டங்களைப் பார்த்து வருகிறோம்.
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும், வளரும் சூழலில், நம்முடைய தடுப்பூசிகளின் செயல்திறன் செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், தடுப்பூசியில் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்வது அவசியம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
இப்போது இருக்கும் தளத்தைப் பயன்படுத்தி எவ்வளவு விரைவாக தடுப்பூசி உருவாக்க வேண்டும் என்பது முக்கியம். கொரோனா வைரஸின் இப்போதுள்ள உருமாற்றத்தை மையமாக வைத்து தடுப்பூசி தயாரிக்க வேண்டும்.