விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளராக அண்மையில் மறைந்த விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டு களத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக கொட்டு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் மறைந்த விஜயகாந்ததின் இளைய மகன் சண்முக பாண்டியன் பொதுமக்களிலேயே தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பலரும் அவருக்கு கை கொடுக்க முண்டியடித்தனர். அதனை கண்ட அவருடனிருந்த நடிகர் ராஜேந்திரன் கை கொடுத்தால் மட்டும் போதாது! ஓட்டு போடணும்!! என்றார். அதனைத் தொடர்ந்து வாகனத்திலிருந்து கீழே இறங்கிய சண்முக பாண்டியன் கும்பிட்டபடியே நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கி, அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு, முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- உங்கள் வீட்டுப் பையனாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளராக போட்டியிடுகிறார். உங்களின் அன்பும், பாசமும் எங்கள் அண்ணனுக்கு ரொம்ப முக்கியம். எங்கள் அப்பா விஜயகாந்த்க்கு நீங்கள் எவ்வளவு அன்பும், பாசமும் காட்டினீர்களோ! அதே அன்பையும், பாசத்தையும் என் அப்பாவின் மறு சாயல் போல் உள்ள என்னுடைய அண்ணனுக்கும் காட்டுங்கள். எங்கள் அப்பா விஜயகாந்த் இல்லையே என நிறைய பேர் நினைத்து, அவரைப் பார்க்க முடியவில்லை என ஏங்குகிறீர்கள்! நீங்கள் யாரும் ஏங்க வேண்டாம். எங்க அப்பாவின் மறு உருவமாக உள்ள விஜய பிரபாகரனுக்கு வாக்களித்து ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்தால், நம் குரல், நமது கோரிக்கை டெல்லியில் ஒலிக்கும். எனது அண்ணன் விஜய பிரபாகரன் நன்கு படித்தவர். அவருக்கு ஆங்கிலம்- ஹிந்தி நன்கு தெரியும். நம்முடைய பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேச நமக்கு ஒரு ஆள் தேவை. முன்பாக ஜெயித்தவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதால் நம்மிடையே ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். நம்முடைய பிரச்சனையை டெல்லியில் பேசி பிரச்சனைகளை தீர்த்து வைத்து, இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு எனது அண்ணன் விஜய பிரபாகரன் நல்லது செய்வார். என்றார்.
மறைந்த விஜயகாந்த் பற்றி அவரது இளைய மகன் பேசியதை கூட்டத்தில் நின்றபடி கேட்ட ஒரு பெண் ஒருவர் கண்கலங்கி தனது சேலை தலைப்பால் கண்ணீர் வடியாமல் கண்களை துடைத்துக் கொண்டார்.
கூட்டத்தில் கைக்குழந்தையுடன் நின்ற மற்றொரு இளம்பெண், ஒரு கிராம் தங்கம் ரூபாய் 9 ஆயிரம் வரை விற்பதால் தங்களால் தங்கம் வாங்க முடியவில்லை எனவும், தங்கம் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்து கூறியதைக் கேட்ட சண்முக பாண்டியன், தனது சகோதரர் விஜய பிரபாகரன் வெற்றி பெற்று டெல்லிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக செல்லும்போது தங்கம் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.