கல்லூரியில் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் தேனி எம்பியும் ,ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் .
தேனி தொகுதி அதிமுக எம்பியும், ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத் பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது… “கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டத்தை வரவேற்கிறேன். இது போன்ற திட்டங்கள் பெண்களின் உயர்கல்வி படிப்பை ஊக்குவிக்கும். இந்த திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக இலவச லேப்டாப், சைக்கிள் என்று பல சலுகைகளை வழங்கினார்” என்று கூறினார். மேலும் அவர் பேசும் போது, “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், சின்னம்மா மற்றும் வரக்கூடிய அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பது ஒருங்கிணைப்பாளரின் கருத்து. அதுவே எனது கருத்தும். வரக்கூடிய தேர்தலை அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் இணைந்து சந்திக்க வேண்டும்” என்று கூறினார்.