மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட பள்ளிகளை சீரமைக்க, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த திங்கட்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஐந்தாவது நாள்களாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக உரிய ஏற்பாடுகளை செய்ய பள்ளிக்கல்வித் துறை நேற்று முன்தினம் நான்கு மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், சேதமடைந்த பள்ளிகளை சீரமைக்க பள்ளிக்கல்வித் துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.