தமிழகத்தில் எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை முதல்வர் , அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளன என, செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமையை ஏற்றுவது தான் திராவிட மாடலா..?. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர், அமைச்சர்கள் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் உள்ளன.எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பது ‘டெம்ப்ரவரி’ பதவி தான். விரைவில் அவர் பொதுச் செயலாளர் ஆவார். அவர் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்.காங்கிரஸ் எம்பி ராகுல் இளம் தலைவர். அவரது பாதயாத்திரை காங்கிரசுக்கு பலன் தருமா என தெரியவில்லை. அவருக்கு பலன் தரும்.முதல்வர் ஸ்டாலின், ‘நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன்’ என்கிறார். அதை கேட்டால் சிரிப்பு வருகிறது. போட்டோவுக்கு போஸ் கொடுத்து, டிவியில் முகத்தை தான் காட்டுகிறார். இப்படி பேசி, சினிமாவில் நடிகர் வடிவேலு இல்லாத குறையை முதல்வரும், அமைச்சர்களும் போக்குகின்றனர்.நீட் தேர்வை திமுக ரத்து செய்யும் என்று மாணவர்களை குழப்பியதால் தான் தேர்ச்சி குறைந்துள்ளது. திட்டங்களை நிறைவேற்ற நிதி இல்லை என்கிறார் முதல்வர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வருக்கு கஜானாவில் பணம் இருக்கிறதா, இல்லையா என தெரியாமலா மதுவிலக்கு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என உறுதியளித்தார்..?” என்று கேள்வி எழுப்பினார்.