திரைப்படங்களை விமர்சனம் செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான பொதுக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ‘திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகுதான் படத்தை குறித்த விமர்சனங்கள் எழுத வேண்டும். திரையரங்குகளில் படம் பார்த்த பின் கருத்து கேட்பதற்காக கேமராக்களை திரையரங்குகளுக்கு உள்ளே திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்கக்கூடாது.திரைப்படங்களையும், நடிகர் – நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறாக செய்தி பரப்பும் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி தருவதை திரைத்துறையினர் தவிர்க்க வேண்டும்.என்பது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இன்றைய காலகட்டத்தில், ஒரு திரைப்படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக திரை விமர்சனங்கள் உருவாகியுள்ளது என்று கூறினால் மறுக்க இயலாது.இந்த நிலையில், இந்த விமர்சனங்களை பதிவிட புதிய கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.