தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு விளக்கம் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு பயனாளிகளின் ஆதார் எண்,விரல் ரேகை சரிபார்ப்புக்கு பிறகு பொருட்கள் வழங்கப்படுகிறது.
விரல் ரேகை சரிபார்ப்பு போன்ற காரணங்களால் தோல்வியுறும் போதும் கையெழுத்து பெற்று பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வராத சூழலில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கண் கருவிழி சரிபார்ப்பு முறை முன்னோட்ட திட்டமாக நகரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். விரல் கைரேகை சரிபார்ப்பு முறை தோல்வியடையும் பட்சத்தில் அவர்களுக்கு உணவு பண்டங்களை மறுக்கக் கூடாது என்று தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.