திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யபட்டார். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் (50). இவர் நேற்று மாலை நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஓன்று, அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நடேச.தமிழார்வன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த அவரது ஆதரவாளர்கள், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கொலைச் சம்பவத்தை கண்டித்து நீடாமங்கலம் கடை வீதியில் உள்ள கடைகள், அவ்வழியாகச் சென்ற வாகனங்களைக் கல்வீசித் தாக்கினர். தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தினர். பின்னர் தமிழார்வனின் உடல் முன்பு அமர்ந்து, கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென கோஷமிட்டனர்.