அசாம் மாநிலத்தில் விமானத்தில் திடீரென பழுது ஏற்பட்டதால் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
கும்பகிராம் விமான நிலையத்திலிருந்து ஏர்பஸ் ஏ319 என்ற ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவை நோக்கி பயணத்தைத் துவங்கியது. விமானம் பறக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருந்ததை விமான ஓட்டுநர்கள் கண்டுபிடித்தனர்.
இதனால் பதட்டமடைந்த அவர்கள் உடனடியாக கிளம்பிய வேகத்திலேயே மீண்டும் விமானத்தை கும்பகிராம் விமான நிலையத்திலேயே தரையிறக்கினர். இதனால் விமானத்தில் பயணம் செய்த 100 பேர் உயிர்தப்பினர். இதையடுத்து விமான ஓட்டிகளுக்கு பயணிகள் நன்றி கூறி பாராட்டு தெரிவித்தனர்.இந்த ஏர்பஸ் ஏ319 விமானம் கிட்டத்திட்ட 156 பயணிகள் பயணிக்கும் வசதி கொண்டதாகும். விமானத்தின் சக்கரத்தில் கியர் பழுதை கண்டறிந்து உடனே தரையிறங்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், திருவனந்தபுரத்திலிருந்து சவுதி அரேபியாவை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதைக் கண்டறிந்த விமானிகள், உடனே அவசரமாக அருகே இருந்த விமான நிலையத்தில் தரையிறக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.