நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா –விக்னேஷ்சிவன் தம்பதியினருக்கு திருமணமான 5 மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களால் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். அதில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து தாய்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு ஹனிமூன் சென்று கொண்டாடிய இந்த ஜோடி தற்போது சினிமாவில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே அக்டோபர் 9-ந் தேதி பிஞ்சு குழந்தைகளின் கால்களை பிடித்து முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்தார் விக்னேஷ் சிவன்.
இதைபார்த்த உடனே பலரும் கேட்ட கேள்வி எப்படி நான்கே மாதத்தில் குழந்தை பிறந்தது என்பது தான். அதற்கெல்லாம் விடை அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். இது மேலும் சர்ச்சையை கிளப்பியது. ஏனெனில் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எப்படி அந்த முறையில் குழந்தை பெற்றெடுத்தார்கள் என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தன.
இவ்வாறு நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நயன்தாராவிடம் விசாரணை நடத்த வேண்டுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள் என கூறினார்.