சினிமாவை ரசிக்காத ஆளும் இல்லை, போற்றாத மக்களும் இல்லை. அப்படி அவர்கள் பார்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று (செப்டம்பர் 23) தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்ட மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் இன்று மட்டும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.75 மட்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முதலாகவே மக்கள் பலரும் ஆர்வமாக ரூ.75 டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்துள்ளனர். மேலும் இன்று நேரிலும் பலர் டிக்கெட்டுகள் எடுத்துள்ளனர். இன்று மல்டிப்ளெக்ஸ்களில் திரையிடப்படும் படங்கள் பெரும்பாலும் முழுவதும் இருக்கைகள் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரம்மாஸ்திரா, வெந்து தணிந்தது காடு படங்களுக்கு அதிகமானோர் செல்வதாகவும், சமீபத்தில் வெளியாகியுள்ள படங்களுக்கு குறைந்த விலை டிக்கெட்டுகளால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் தெரிவித்துள்ளன.