சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் முக்கிய விருந்தினர்கள் தங்கும் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் அருகே நேற்று மர்மப்பொருள் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதனை அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது சதி வேலையா என சந்தேகம் அடைந்த அவர்கள், உடனே இதுகுறித்து சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர் களுடன் ஆளுநர் மாளிகைக்கு போலீசார் விரைந்தனர்.
அங்கு கிடந்த மர்மப்பொருட்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அது ‘டிரோன்’ போல் இருந்ததால் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஒரு கட்டத்தில் அது வானிலை ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் பலூன் என்பது தெரியவந்தது. வானிலை ஆய்வுக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பறக்கவிடப்படும் பலூன் என்றும், அது செயல் இழந்து விழுந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.