திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்ட திருக்குறள் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. வானுயர்ந்த அந்த சிலையை அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்த நிலையில் இச்சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா மூன்று நாட்கள் கொண்டாட திட்டமிட்டப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, விழா இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் மற்றும் 133 அடி உயரமுள்ள கொண்ட திருவள்ளுவரின் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நேற்று திறந்து வைத்தார். அன்று மாலை கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் வெள்ளி விழாவின் இரண்டாவது நாளான இன்று, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்ட திருக்குறள் புகைப்படக் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.