எத்தனை வைத்தியங்கள் இருந்தாலும் பாட்டி வைத்தியத்துக்கு தனி மதிப்பு என்பது போன்று பாரம்பரியமான அழகு குறிப்புகளுக்கும் தனி மதிப்பு உண்டு. அதிலும் அழகு குறிப்பில் முன்னோர்கள் பின்பற்றி வந்த பல ரகசிய அழகு குறிப்புகளை பெரும்பாலும் இப்போது பின்பற்றப்படுவதில்லை. நூற்றாண்டுகளாக சருமத்துக்கும் கூந்தலுக்கும் செய்து வந்த பராமரிப்புகள் பலவும் இயற்கையானவை. அவை கூந்தலுக்கும் சருமத்துக்கும் எவ்வித பாதிப்பையும் அளிக்காதவை. அழகு குறித்த ரகசிய பொக்கிஷங்களில் கூந்தலின் அழகுக்கும் வளர்ச்சிக்கும் செய்த குறிப்புகளை தெரிந்துகொள்வோம்.
வேப்பிலை
வேப்பிலை பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் இருக்க கூடிய மரம் ஆகும். வேப்பிலை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் வேர்களை வலுப்படுத்துவதற்கும் பெயர் பெற்ற மூலிகை. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சிறந்த தீர்வாகும். உச்சந்தலையில் உள்ள நிலைகளை குணப்படுத்துவதற்கு முடி உதிர்தலை குறைப்பதற்கும் உதவுகிறது.
வேப்பம் இலைகளை எடுத்து 15 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிரவைக்கவும். பிறகு இந்த திரவத்தை வடிகட்டி வேப்பிலை தண்ணீரை கொண்டு முடியை அலசி எடுக்கவும்.
உலர்ந்த வேப்பிலை தூளாக இருந்தால் அதை பேஸ்ட் ஆக்கி கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். முன்னோர்கள் சீயக்காயில் வேப்பிலை இலையை சேர்ப்பார்கள். இது உச்சந்தலை தொற்றை தடுப்பதால் முடி வளர்ச்சி பாதிக்காமல் இருக்கும்.!