செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 88 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான த. சரத்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நான்காவது மண்டலத்திற்குட்பட்ட 60-வது வார்டு கல்யாண் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.89.37 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு மையம், டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட ஏ.ஆர். மற்றும் வி.ஆர். ஆய்வகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

அதேபோல், ஐந்தாவது மண்டலத்தின் 64-வது வார்டு இரட்டைச் சாலையில் ரூ.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வார்டு அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. சேலையூர் மாநகராட்சி பள்ளியிலும் ரூ.89.37 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஏ.ஆர்., வி.ஆர். ஆய்வகத்தை அமைச்சர் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும், மூன்றாவது மண்டலத்தின் 23-வது வார்டு ஜமீன் ராயப்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.88 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வகமும் திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 45-வது வார்டில் ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான மனமகிழ் மன்றக் கட்டிடம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் சரத்குமார் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டலக் குழுத் தலைவர் எஸ். இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், சகிலா, ஜான்சி மேரி, ரமணி, ஆதிமூலம், கீதா வேணுகோபால், சமூக ஆர்வலர் சந்தானம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக சமூக ஆர்வலர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கியும் அமைச்சர் த.சரத்குமார் மகிழ்வித்தார்.



