ஊட்டி நகரில் உள்ள பார்ங்கிங் தளங்களில் உள்ளூர் வியாபாரிகள் வாகனங்களை நிறுத்திக் கொள்வதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக் குள்ளாகின்றனர்.
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் உணவிற்காகவும், பல்வேறு பொருட்களை வாங்கவும் நகருக்குள் வருகின்றனர். அதேபோல், கிராமப்பு றங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் தினமும் ஊட்டி நகருக்கு வந்து செல்கின்றனர். வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் கிடைப்பதில்லை. பெரும்பாலான பகுதிகளில் உள்ள பார்க்கிங் தளங்களில் உள்ளூர் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, உள்ளூர் வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் இந்த பார்க்கிங்குகளில் நிறுத்திக் கொள்கின்றனர்.
இதனால், சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு எங்கு பார்க்கிங் உள்ளது என தெரியாமல், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக நகரை சுற்றி வரும் அவலம் தொடர்கிறது.
இதுதவிர, வாகனங்களை நிறுத்த முடியாமல் புறநகர் பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால், சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடிவதில்லை. உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஊட்டி நகரில் உள்ள பார்க்கிங்குகளில் உள்ளூர் வாகனங்கள் நிறுத்துவதை, குறிப்பாக உள்ளூர் வியாபாரிகள் நிறுத்துவதை தவிர்க்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.