விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்று மாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மனை தரிசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர் இருக்கன்குடி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்து வந்தும், கோவில் வளாகத்தில் மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வணங்கி வருகின்றனர். மாசி மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.