

சிவகங்கை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். உள்ளாட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் அதிக அளவில் குப்பை தேக்கம் இருப்பதால், அனைத்து பகுதிகளிலும் மாஸ் கிளீனிங் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


அதன்படி, சிவகங்கை நகராட்சி நிர்வாகம் 26, 27-ம் வார்டுகளிலும் மாஸ்கிளீனிங் தூய்மை இயக்கத்தை நகரமன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் உறுதிமொழி ஏற்று தொடங்கி வைத்தனர். கடந்த வாரம் 1-ஆவது வார்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இன்று நகராட்சியின் 27 -ஆவது வார்டு பகுதியில் மாஸ் கிளீனிங் பணியை நகர் மன்றத்தலைவர் துரைஆனந்த் தொடக்கி வைத்தார்.


திரளான துப்புரவுப்பணியாளர்கள் மூலம் வீதிகளின் கால்வாயில் தேங்கியுள்ள கழிவு நீர் அடைப்புகள், முட்செடிகள், குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5மணி வரை தூய்மைப்பணிகள் மேற்கொண்டனர்.
முன்னதாக, நகராட்சி ஆணையர் கிருஷ்ணராம், நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல்ஜபார் ஆகியோர் முன்னிலையில் சுகாதார உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், 26 -ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மதியழகன், மேற்பார்வையாளர்கள் செந்தில்வேல், கணேசன், மாலதி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



