பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் பகுதியை சேர்ந்த பரமன் (எ)பரமசிவம் கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பரமசிவத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்பெண்ணுக்கு ஒன்பது வயதில் சிறுமி உள்ளார்.
2019 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது சிறுமியின் தாயாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் தாயார் சைல்டு லைனில் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்தனர். பரசிவம் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பரமசிவத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு பினையில் வெளியே வந்த பரமசிவம் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில் திடீரென நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். தற்பொழுது நீதிமன்றத்தில் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் பரமனை அறிவித்திருந்தது.
இந்நிலையில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அறிவுறுத்தலின்படி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி மற்றும் மகளிர் போலீசார் பரமனைத் தேடி வந்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சா வேலம்பட்டியில் தலைமறைவாக இருந்த பரமனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.