கன்னியாகுமரி முக்கடல் பகுதியில், குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில், மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று முன் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என பொது வெளியில் கடந்த வாரம் அறிவித்த நிலையில்,
நேற்று (20.09.2021) காலை முதலே, கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதி மற்றும் சூரிய உதயம் பகுதி முழுவதும், காவல்துறையால் வேலி அமைத்து தடுக்கபட்டதுடன், மாலை வரை பாதுகாப்பு பகுதி என காவல்துறை யாரையும் அனுமதிக்காது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மாலை 5 மணி முதலே பாஜக கட்சியை சேர்ந்தவர்களுடன் பல்வேறு இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரி அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் பச்சைமால், அ.தி.மு.க.வை சேர்ந்த பல்வேறு பொறுப்பாளர்களும், தி.மு.க.வைச் சேர்ந்த நாகர்கோவில் மாநகர தி.மு.க செயலாளர் மகேஷ், கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்களும் திரண்டிருந்த நிலையில், காவல்துறை யின் தடுப்புகளை அகற்றி விட்டு கடற்கரை பகுதிக்குள் செல்ல முயல, காவல்துறை தடுப்பு பகுதியில் சில நிமிடங்கள் தள்ளு முள்ளு நடந்ததது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தளவாய் சுந்தரம் கூட்டத்தினரை அமைதிப்படுத்தியதுடன், மாவட்டத்தின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சூரிய உதயத்தை பார்க்கும் அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து பொது மக்கள் அமைதியாக, முன் இரவு 7.30 மணி அளவில் நடக்கவிருக்கும் தீப ஆராதனையை தரிசிக்க அனுமதியுங்கள் என கேட்டுக் கொண்டதற்கிணங்க, தடை குறிப்பிட்ட பகுதியில் காவல்துறை அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி அமைதியான முறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சி முடியும் வரை கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் பலத்த காவல்துறை கண் காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.